“நல்ல கதையம்ச படங்கள் ஜெயிக்கும்” -நடிகர் ஜெயம்ரவி


“நல்ல கதையம்ச படங்கள் ஜெயிக்கும்” -நடிகர் ஜெயம்ரவி
x
தினத்தந்தி 3 Jan 2019 10:28 PM GMT (Updated: 3 Jan 2019 10:28 PM GMT)

ஜெயம்ரவி நடித்த ‘அடங்க மறு’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள். இதில் ஜெயம்ரவி கலந்துகொண்டு பேசியதாவது:-

“கடந்த வருடம் எனது டிக் டிக் டிக் படம் நன்றாக ஓடியது. ‘அடங்க மறு’ படம் ரசிகர்களுக்கு பிடித்து இதுவும் வெற்றி பெற்றுள்ளது. கதையை விட உணர்வுப்பூர்வமான விஷயங்கள் படத்தில் அதிகம் இருந்தன. ராமாயணம் கதையை கேட்டு இருக்கிறோம். பழைய கதைகளைத்தான் புதிதாக எடுக்கும் நிலை உள்ளது.

ஆனாலும் அதை எப்படி உருவாக்குகிறோம், எந்த மாதிரி உருமாறுகிறது என்பதில்தான் வெற்றி இருக்கிறது. கதை எந்த மாதிரி வேண்டுமானலும் இருக்கலாம். அதை எப்படி வழங்குகிறோம் என்பது முக்கியம். நுணுக்கமான நிறைய விஷயங்கள் அடங்க மறு படத்தில் இருந்தன. நான் நடித்த ஆதிபகவன் படப்பிடிப்பு தீபாவளிகள், பொங்கல்கள் என்று தள்ளிப்போனது.

எப்போதுதான் படப்பிடிப்பு முடியுமோ என்று நினைத்த நேரத்தில் அந்த படத்தில் உதவி இயக்குனராக கார்த்திக் தங்கவேல் வந்து சேர்ந்தார். அதன்பிறகு ஒன்றரை மாதத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நடந்து இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஆதரிக்கவும், வெற்றி பெறச்செய்யவும் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்”.

இவ்வாறு ஜெயம்ரவி பேசினார். நடிகர்கள் மைம்கோபி, அழகம் பெருமாள், டைரக்டர் கார்த்திக் தங்கவேல், நடிகை ராஷி கண்ணா, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

Next Story