அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்


அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
x
தினத்தந்தி 4 Jan 2019 11:15 PM GMT (Updated: 4 Jan 2019 10:25 PM GMT)

அமெரிக்காவில் ஓய்வை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளார்.


ரஜினிகாந்தின் 2.0 படம் நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. அதன்பிறகு பேட்ட படவேலைகளை முடித்துவிட்டு கடந்த மாதம் 22-ந் தேதி குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடினார். ஓய்வு முடிந்து அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புகிறார்.

பேட்ட படம் வருகிற 10-ந் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக அவர் சென்னை திரும்பி விடுவார் என்று நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.

இயக்குனர் வினோத்திடமும் கதை கேட்டு இருக்கிறார். பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் மீண்டும் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. இன்னொரு புறம் அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அவர் அறிவித்து இருந்தார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒதுங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் கட்சி தொடங்குவதை தாமதப்படுத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்சி வேலைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். கட்சி பெயர், கொடியை ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளார். கட்சியின் கொள்கை திட்டங்களும் தயாராகி உள்ளன.


Next Story