இளையராஜாவை கவர்ந்த பின்னணி பாடகி! - பிறந்தநாள் விழாவில், பரபரப்பு பேச்சு


இளையராஜாவை கவர்ந்த பின்னணி பாடகி! - பிறந்தநாள் விழாவில், பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 10:24 PM GMT)

இளையராஜா, தன்னை கவர்ந்த பின்னணி பாடகிகுறித்து பிறந்தநாள் விழாவில் தெரிவித்தார்.


இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூன் மாதம் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை அவருடைய பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், இளையராஜா கலந்து கொண்டார்.

அவரிடம் மாணவிகள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இளையராஜா அளித்த பதில்களும் வருமாறு:-

“கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டா?”

“படிக்கும் படிப்புக்கும், செல்லும் வேலைக்கும், வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. நான் படிப்புக்காக எந்த கல்லூரிக்கும் போனதில்லை. அதுதான் இங்கு வந்து விட்டேனே... இதுபோல் பல கல்லூரிகளுக்கு போய்க்கொண்டிருக்கிறேன்.”

“இசையமைப்பாளராக ஆகாமல் இருந்திருந்தால்...?”

“இசைக்கலைஞராக இருந்திருப்பேன். அதுவும் இல்லையா...நான் வேறு என்னவாகி இருந்தால், நீங்கள் சந்தோஷப்பட்டு இருப்பீர்கள்?”

“நீங்கள் முதலில் சென்ற வெளிநாடு எது,? அங்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம் பற்றி கூற முடியுமா?”


“அன்னக்கிளி, பத்ரகாளி, தீபம் ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த பிறகு மலேசியாவுக்கு ஒரு கச்சேரிக்காக சென்றேன். 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அந்த மேடையில், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் என்னை மட்டம்தட்டிப் பேசியது மறக்க முடியாத நிகழ்வு”

“சென்னைக்கு எப்போது வந்தீர்கள்?”

“1968 மார்ச். தேதி ஞாபகம் இல்லை”

“யாரிடம் ஆட்டோகிராப் வாங்க நினைக்கிறீர்கள்?”

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணாவை சந்தித்து ஆசிர்வாதமும், அன்பையும் பெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். அவரது அன்பையும் பெற்றுள்ளேன்.”

“பல இசைக்கருவிகளை வாசிக்கும் உங்களுக்கு பிடித்த இசைக்கருவி எது?”

“என் மனம்தான் எனக்கு பிடித்த இசைக்கருவி. என்னிடம் மட்டுமல்ல; உங்கள் எல்லோரிடமும் இது இருக்கிறது. அந்த அற்புதமான சொத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தராதீர்கள். அப்படி செய்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். சரியான பாதையில் பயணிக்க முடியும்.”

“வெள்ளை ஆடைக்கு மாறியது ஏன்?”

“மூகாம்பிகை பக்தனாக மாறிய தருணம். இனி இதுதான் நமக்கான ஆடை என்று முடிவெடுத்தேன். அதுவரை, அந்தந்த காலகட்டத்தில் வரும் எல்லா வகையான ஆடைகளையும் அணிந்திருக்கிறேன்.”

“யாருடன் இணைந்து டூயட் பாடல் பாட விரும்புகிறீர்கள்?”


“ஆஷா போஸ்லே சிறந்த பாடகி. அவர் வந்து விட்டாலே எனக்கு கற்பனைகள் பெருக்கெடுக்கும். ஒரு பாடல் பதிவு செய்ய வந்தால், அந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாதே என்று மேலும் 2 பாடல்களை பாட வைத்துவிட வேண்டும் என்று நினைப்பேன்”

இவ்வாறு இளையராஜா பதில் அளித்தார்.



Next Story