சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி ஜாமீனில் விடுதலை


சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 8 Jan 2019 2:14 PM GMT (Updated: 8 Jan 2019 2:14 PM GMT)

சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை,

தமிழ் திரைப்பட இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி.  இவர் சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்து பிரபலமடைந்தவர்.  அதன்பின் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக இவர் அறிமுகம் ஆனார்.  அதன்பின் கோ, யுவன் யுவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக்பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சியிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சக்தி சாலையில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று உள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர்.  இதுபற்றி அவர்கள் போலீசாரிடமும் தெரிவித்து உள்ளனர்.  அவரிடம் அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

Next Story