கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வரவேண்டும் பட விழாவில் சத்யராஜ் பேச்சு


கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வரவேண்டும் பட விழாவில் சத்யராஜ் பேச்சு
x
தினத்தந்தி 8 Jan 2019 11:15 PM GMT (Updated: 8 Jan 2019 5:38 PM GMT)

கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள் அதிகம் வரவேண்டும் என்று கனா பட வெற்றிவிழாவில் சத்யராஜ் பேசினார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள். நடிகர்-நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

“அந்த காலத்தில் நிறைய படங்கள் 100 நாட்கள் ஓடி இருக்கின்றன. 1987-ல் நான் நடித்த பாலைவன ரோஜாக்கள் மற்றும் வேலை கிடைச்சிடிச்சி, நடிகன், ரிக்‌ஷா மாமா என்று பல படங்கள் தொடர்ச்சியாக 100 நாட்கள் ஓடின. இந்த காலத்தில் அந்த நிலைமை இல்லை. சிவகார்த்திகேயன் நண்பர்களுக்காக இந்த படத்தை எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

எந்த பிரதிபலனும் பார்க்காமல் இதை செய்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக கனா வந்துள்ளது. சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருப்பதால் சினிமாவின் பார்வை இந்த மாதிரி படங்கள் பக்கம் திரும்பும். பலரும் இதுபோல் படங்கள் எடுக்க வருவார்கள்.

பராசக்தி, நாடோடி மன்னன் போன்ற படங்களின் வெற்றி ஒரு சமூகத்தின் வெற்றி. அதுபோல் கனா படத்தின் வெற்றியும் சமூகத்தின் வெற்றி. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் சாவித்திரி காலத்திலும் சுஜாதா காலத்திலும் அதிகம் வந்தன. அதன்பிறகு குறைந்து விட்டது. கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள் அதிகம் வரவேண்டும்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார். விழாவில் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்டர் அருண்ராஜா காமராஜ் உள்பட பலர் பேசினார்கள்.

Next Story