“பணத்தை ஏமாற்றி பறித்தனர்: தற்கொலைக்கு முயன்றேன்” மனம் திறந்த நடிகை ஷகிலா
தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஷகிலா பேட்டி அளித்துள்ளார்.
மலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.
தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து ஷகிலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. 15-வது வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன். நான் கமல்ஹாசன் ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது.”
இவ்வாறு ஷகிலா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story