‘கட் அவுட்டு’க்கு பாலாபிஷேகம் வேண்டாம் : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்


‘கட் அவுட்டு’க்கு பாலாபிஷேகம் வேண்டாம் : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 5:54 PM GMT)

சிம்பு ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கிய வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பொங்கலுக்கு இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர்.  ஆனால் ரஜினியின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் வெளியானதால் ரிலீசை தள்ளிவைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிம்பு, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“வந்தா ராஜவாதான் வருவேன் படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 1-ந் தேதி ரிலீசாகிறது. புத்தாண்டு, பொங்கலையொட்டி என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொதுவாக ஒரு நடிகர் படம் வெளியாகும்போது சில இடங்களில் அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட்டை விற்கிறார்கள். அதிக பணம் கொடுத்து படம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தியேட்டரில் ஒழுங்காக என்ன டிக்கெட் விலையோ அதை கொடுத்து படம் பார்த்தால் போதும்.

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து அன்பை வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் அப்பா அம்மாதான் உங்களுக்கு எல்லாமே. இந்த தடவை பாலாபிஷேகம் செய்வதற்கு பதிலாக உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை, தம்பி தங்கைக்கு ஒரு சாக்லெட் வாங்கி கொடுங்கள்.

அப்படி உங்கள் அம்மாவுக்கு புடவை எடுத்து கொடுத்து ஒரு போட்டோவை நீங்கள் பதிவிட்டால் அதை விட எனக்கு வேறு சந்தோஷம் எதுவும் இல்லை. பேனர், கட் அவுட் வைத்து கெத்து காட்டுவது முக்கியம் இல்லை. நான் படத்தில் நடித்து உங்கள் பெயரை காப்பாற்றுகிறேன். எனக்காக நீங்கள் இதனை செய்யுங்கள்.”

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.


Next Story