“சினிமா, நம்புகிறவர்களை கைவிடாது” - பட விழாவில், நடிகர் பாண்டியராஜன் பேச்சு


“சினிமா, நம்புகிறவர்களை கைவிடாது” - பட விழாவில், நடிகர் பாண்டியராஜன் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2019 10:47 PM GMT (Updated: 22 Jan 2019 10:47 PM GMT)

சினிமா, நம்புகிறவர்களை கைவிடாது என்று பட விழாவில், நடிகர் பாண்டியராஜன் பேசினார்.


மாணிக் சத்யா இயக்கத்தில் பிருத்விராஜன்-சாந்தினி ஜோடியாக நடித்துள்ள படம் ‘காதலர் முன்னேற்ற கழகம்’. மலர்க்கொடி முருகன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

“சிறிய படம், பெரிய படம் வித்தியாசம் இல்லை. ஜெயிக்கிற படங்கள் எல்லாம் பெரிய படம்தான். தலையனை இல்லாமல் எத்தனையோ ராத்திரிகள் படுத்து கஷ்டப்பட்டுத்தான் நான் உயர்ந்தேன். சினிமாவை நம்பினோர் கைவிடப்படார். முட்டியில் ரத்தம் வரும்வரை ஆடி இருக்கிறேன். அந்த பாடலை பார்த்தார்களா இல்லையா தெரியாது. ஆனால் ‘கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன’ என்ற பாடலில் கையை மட்டும்தான் ஆட்டினேன். அந்த பாடல் ஹிட்டாகி என்னாமா ஆடி இருக்கிறீர்கள் என்று பாராட்டினார்கள். இதுதான் சினிமா.

எதிர்பார்க்காமல் முழுமனதோடு வேலை செய்யுங்கள். வெற்றி நிச்சயம் வரும். சில படங்கள் ஜெயிக்கும் என்று நினைப்போம் ஆனால் வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. வெற்றி எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது.

சினிமாவில் வெற்றி கிடைப்பது வரை போராடிக்கொண்டே இருங்கள். விடாமுயற்சியாக இருங்கள். படம் வெற்றி அடைந்த பிறகு மனநிலை மாறும். புகழை தலைக்கு ஏற்றாதீர்கள். ‘காதலர் முன்னேற்ற கழகம்’ படம் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது. கிளைமாக்ஸ் முன்னால் இருந்து மனதில் பாரம் ஏற்படுத்தும். பிருத்வி நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. இவ்வாறு பாண்டியராஜன் பேசினார்.

விழாவில் நடிகர்கள் ஆரி, பிருத்விராஜன், தயாரிப்பாளர்கள் கதிரேசன், தேனப்பன், இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, பி.சி.சிவன் உள்பட பலர் பேசினார்கள்.


Next Story