டுவிட்டர், போன் முடக்கம்: நடிகை ஹன்சிகா விளக்கம்


டுவிட்டர், போன் முடக்கம்: நடிகை ஹன்சிகா விளக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2019 10:15 PM GMT (Updated: 24 Jan 2019 8:21 PM GMT)

டுவிட்டர், போன் முடக்கம்: நடிகை ஹன்சிகா விளக்கம்

நடிகர், நடிகைகளின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் மொபைல் போன்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து ஊடுருவி தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை திரிஷாவின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த எண்களை அழித்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது போன் நம்பர் தெரிந்தவர்கள், டுவிட்டரில் பின் தொடரும் நண்பர்கள் உங்கள் நம்பரை வாட்ஸ் அப் செய்யுங்கள் யாரோ வேலையில்லாத கோழை என் போனை ஹேக் செய்து அனைத்து தொடர்பு எண்களையும் அழித்து விட்டார்” என்றார்.

இதுபோல் நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் முகநூல் பக்கத்தை விஷமிகள் கைப்பற்றி இன்னொரு நடிகையின் சமூக வலைத்தளமாக மாற்றினர். இப்போது நடிகை ஹன்சிகாவின் போன் மற்றும் டுவிட்டர் கணக்கும் மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்த ஹன்சிகாவின் நீச்சல் உடை படங்கள் திருடப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது இந்த புகைப்படங்களை எடுத்து போனில் அவர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். “எனது போன் மற்றும் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. எனவே அதில் வரும் பதிவுகள் எதையும் பொருட்படுத்த வேண்டாம். என்னுடைய குழு இதனை சரி செய்ய முயற்சி செய்து வருகிறது” என்று டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.

Next Story