ரசிகர்களின் காதல் தேவதை “நயன்தாரா இடத்தை பிடிக்க முயற்சிப்பேன்” நடிகை பிரியா வாரியர் பேட்டி


ரசிகர்களின் காதல் தேவதை “நயன்தாரா இடத்தை பிடிக்க முயற்சிப்பேன்” நடிகை பிரியா வாரியர் பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2019 11:59 PM GMT (Updated: 27 Jan 2019 11:59 PM GMT)

“ரசிகர்களின் காதல் தேவதை என்ற நயன்தாராவின் இடத்தை பிடிக்க முயற்சிப்பேன்” என்று நடிகை பிரியா வாரியர் கூறினார்.

பள்ளிப்பருவ காதலை முன் வைத்து, தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில், ‘ஒரு அடார் லவ்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. ஓமர்லுலு என்ற டைரக்டர் இயக்கியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள “மாணிக்க மலராய்” என்ற பாடலும், படத்தின் டீசரும் இணையதளங்களில் வெளியாகி ‘வைரல்’ ஆனது. அந்த பாடல் காட்சியில் கதாநாயகி பிரியா வாரியர் கண்ணடித்தது, இளைஞர்கள் மத்தியில் பரபரப்பானது.

‘ஒரு அடார் லவ்’ படத்தை பட அதிபர் எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் எஸ்.தாணு திட்டமிட்டு இருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில், பிரியா வாரியர் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“என் சொந்த ஊர், கேரள மாநிலம் திருச்சூர். என் தந்தை சுங்க அதிகாரியாக இருக்கிறார். அம்மா குடும்பத்தை கவனிக்கிறார். எனக்கு ஒரு தம்பி மட்டும் இருக்கிறான். 7-ம் வகுப்பு படிக்கிறான். நான், ‘பி.காம்.’ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டே நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். படத்தின் டீசரில் நான் கண்ணடித்தது, இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை.

நான், ரசிகர்களின் காதல் தேவதையாக இருக்கவே விரும்புகிறேன். அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். நிஜ வாழ்க்கையில், நான் ஒரு துணிச்சலான பெண். என்னை பாதுகாத்துக் கொள்ள எனக்கு தெரியும்.” இவ்வாறு பிரியா வாரியர் கூறினார்.

அவரிடம், ‘தினத்தந்தி’ நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு பிரியா வாரியர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நிஜவாழ்க்கையில் உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கிறதா?

பதில்:- நான் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் வந்து காதலை சொன்னான். நானும் அவனை காதலித்தேன். அது ஒரு இன கவர்ச்சி என்பதை பின்னர் இருவருமே புரிந்து கொண்டோம். அதன்பிறகு இரண்டு பேரும் பேசி பிரிந்து விட்டோம். இப்போது படிப்பிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தமிழில் எனக்கு பிடித்த நடிகர், விஜய் சேதுபதி. மலையாளத்தில், மோகன்லாலை பிடிக்கும்.

கேள்வி:- உங்கள் ஊரை சேர்ந்த நயன்தாரா தமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாகவும், ரசிகர்களின் காதல் தேவதையாகவும் இருக்கிறார். அவரது இடத்தை உங்களால் பிடிக்க முடியுமா?

பதில்:- நயன்தாராவுடன் என்னை ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு அவர் உயரத்தில் இருக்கிறார். என்றாலும், அவரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அந்த இடத்தை பிடிக்க முயற்சிப்பேன்.” இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story