அஜித்தின் தல 59 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார், யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித், எச்.வினோத் இயக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம் ஆகும்.
முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
காஷ்மீரில் பிறந்து யூ-டர்ன் என்ற கன்னட திரைப்படம் மூலம் சிறந்த நடிகை விருதை வென்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத், டாப்ஸியின் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்த அபிராமி வெங்கடாச்சலம் இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிங்க் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரீயா டாரியாங் இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடிக்க இருக்கிறார். ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அர்ஜுன் சிதம்பரம், இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். திரிஷா இல்லனா நயன்தாரா, ஏஏஏ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
அஜித் பற்றி போனி கபூர் கூறும்போது, “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்பதால் அதனை உருவாக்குகிறோம். அத்துடன், அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைவது மகிழ்ச்சி. பிங்க் ரீமேக்கை மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அஜித்துடனான இரண்டாவது படம் 2020 ஏப்ரலில் திரைக்கு வரும். எச்.வினோத் போன்ற சிறந்த இயக்குநர் அமைந்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.
Related Tags :
Next Story