கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்ற சொல்லவில்லை நடிகர் சிம்பு மறுப்பு


கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்ற சொல்லவில்லை நடிகர் சிம்பு மறுப்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 11:15 PM GMT (Updated: 28 Jan 2019 9:29 PM GMT)

தனது கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்யும்படி ரசிகர்களை அவர் தூண்டுவதாக பால் முகவர்கள் சங்கம் போலீஸ் கமிஷனர் அலுவகலத்தில் புகார் அளித்து இருந்தது.

நடிகர் சிம்பு கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது குறித்து சமீபத்தில் பேசி 2 வீடியோ வெளியிட்டு இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்யும்படி ரசிகர்களை அவர் தூண்டுவதாக பால் முகவர்கள் சங்கம் போலீஸ் கமிஷனர் அலுவகலத்தில் புகார் அளித்து இருந்தது. இதற்கு சிம்பு நேற்று விளக்கம் அளித்து கூறியதாவது:-

“எனது ரசிகர் ஒருவர் இறந்த பாதிப்பினால் எனக்கு கட்-அவுட், பேனர்கள் வேண்டாம் என்று கூறி வீடியோ வெளியிட்டேன். பாக்கெட்டில் உள்ள பாலை அண்டாவில் ஊற்றுங்கள் என்று நான் சொன்னேனே தவிர என் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறவில்லை. ஒரு வேளை நான் பேசியது தவறாக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மாற்றி பேசவில்லை. அண்டாவில் பாலை காய்ச்சி படம் பார்க்க வருகிறவர்களுக்கும் கஷ்டப்படுகிற மக்களுக்கும் ஊற்றுங்கள் என்றேன். வாயில்லாத ஜீவன்களுக்கும் பாலை கொடுங்கள் என்று கூறினேன். பேச முடியாத கட்-அவுட்டுக்கு பாலை ஊற்றுங்கள் என்று சொல்லவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னது எனது மனதில் இருக்கிறது. என்னை விமர்சிப்பது பற்றி கவலை இல்லை. இவ்வாறு சிம்பு கூறினார்.

சிம்பு வருத்தம் தெரிவித்ததை பால் முகவர்கள் சங்கம் வரவேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Next Story