நீயா? 2-ம் பாகம் 3 கதாநாயகிகளுடன் படமான பாம்பு கதை


நீயா? 2-ம் பாகம் 3 கதாநாயகிகளுடன் படமான பாம்பு கதை
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 5:32 PM GMT)

நீயா 2-ம் பாகத்தில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோர் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா ஆகியோர் நடித்து 1979-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் நீயா? தனது இணையை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு அழகான பெண்ணாக மனித வடிவத்துக்கு மாறி எப்படி பழிவாங்குகிறது என்பது கதை. இதில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து தயாரித்து இருந்தார்.

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா போன்ற இனிமையான பாடல்கள் படத்தில் இருந்தன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீயா-2 என்ற பெயரில் தற்போது தயாராகி உள்ளது. இதில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோர் நடித்துள்ளனர். எல்.சுரேஷ் டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, இதுவும் நீயா? படம் போன்று பழிவாங்கும் பாம்பு கதைதான் என்றார். வரலட்சுமி பாம்பு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. பாம்பு தோற்றத்தை ஹாலிவுட் தரத்தில் கிராபிக்சில் மிரட்டலாக படமாக்கி உள்ளனர்.

இதன் படப்பிடிப்பை முடித்து டிரெய்லரை வெளியிடுகிறார்கள். பாடல்களும் விரைவில் வெளியாகிறது. நீயா-2 படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே பில்லா, காஞ்சனா, அரண்மனை, சண்டக்கோழி, சிங்கம், மாரி, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, சாமி உள்ளிட்ட சில படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் நீயா-2 வருகிறது.

Next Story