“என்னை விட, அண்ணன் சூர்யா அழகானவர்” நடிகர் கார்த்தி சொல்கிறார்


“என்னை விட, அண்ணன் சூர்யா அழகானவர்” நடிகர் கார்த்தி சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Feb 2019 11:45 PM GMT (Updated: 5 Feb 2019 5:46 PM GMT)

“என்னை விட, அண்ணன் சூர்யா அழகானவர்’‘ என்று நடிகர் கார்த்தி கூறினார்.

சினிமா படவிழா

கார்த்தி-ரகுல் பிரீத்சிங் ஜோடியாக நடித்த ‘தேவ்’ படத்தின் அறிமுக விழா, சென்னையில் நடந்தது.

அதில் கார்த்தி, ரகுல் பிரீத்சிங், டைரக்டர் ரஜத் ரவிஷங்கர், கவிஞர் தாமரை, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் எஸ்.லட்சுமன் குமார், படத்தை வெளியிடும் எச்.முரளி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள்.

அப்போது கார்த்தி நிருபர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் லட்சுமனும், நானும் குழந்தைப்பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். அவருடைய தாத்தா, ‘மதுரை வீரன்’ படத்தை தயாரித்தவர். டைரக்டர் ரஜத் திறமையான இயக்குனர். ரகுல் பிரீத்சிங் சிறந்த நடிகை. அவர் சொந்தமாக ‘ஜிம்’ நடத்தி வருகிறார். படப்பிடிப்பின்போது அவர் ஒரு தயாரிப்பு நிர்வாகி போல் நடந்து கொண்டார். கதாநாயகி போல் தெரியவில்லை.

வில்லன் இல்லை

‘தேவ்’ ஒரு காதல் படம். ஆனால், காதலை பற்றி பேசும் படம் அல்ல. கதைப்படி, நான் அப்பா வளர்ப்பில் வளர்ந்தவன். ரகுல், அம்மா வளர்த்த பெண். பெண்களுக்கு ஆண்கள் துணை தேவையில்லை என்று நம்புகிறவர். படத்தில் வில்லன் இல்லை. அதிர வைக்கும் காட்சிகள் இல்லை. என்றாலும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது, ஒரு சவாலாக இருந்தது.

எனக்கு முகம் அகலம். அண்ணனுக்கு அழகான முகம். என்னை விட, அண்ணன் சூர்யாதான் அழகன். அதனால் எனக்கு மணப்பெண் சுலபமாக கிடைக்கவில்லை. 6 வருடங்களாக எனக்கு பெண் தேடினார்கள். கடைசியில், “நீயே ஒரு பெண்ணை தேடிக்கொள்” என்று அம்மாவும், அப்பாவும் தமாசாக சொன்னார்கள். “இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே...” என்று நான் கூறினேன்.”

இவ்வாறு கார்த்தி பேசினார்.

Next Story