‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுடன் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்
‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுடன் சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
டைரக்டரும், நடிகருமான சேரன் சிறிய இடைவெளிக்குப்பின், ‘திருமணம்,’ ‘ராஜாவுக்கு செக்’ ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார். 2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. இதில், ‘ராஜாவுக்கு செக்’ படத்தை சாய் ராஜ்குமார் டைரக்டு செய்திருக்கிறார். இவர், ஜெயம் ரவியை வைத்து, ‘மழை’ படத்தை டைரக்டு செய்தவர்.
‘சாய் ராஜ்குமார்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு சில தெலுங்கு படங்களை இயக்கியவர், அதே பெயருடன், ‘ராஜாவுக்கு செக்’ என்ற தமிழ் படத்தையும் இயக்கியிருக்கிறார். இவர் கூறுகிறார்:-
‘‘ராஜாவுக்கு செக் படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே, இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. என் மனதில் முதலில் தோன்றியவர், சேரன்தான். காரணம், சில விஷயங்களை சிலர் சொன்னால்தன், அது சேர வேண்டிய இடத்துக்கு சரியாக சென்று சேரும்.
‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகை சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா ஆகியோருடன் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். வில்லனாக இர்பான் நடித்துள்ளார். மலையாள பட உலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
இது, உணர்வுப்பூர்வமான திகில் படம் என்றாலும், தேவையான அளவுக்கு அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. ஒட்டு மொத்த படத்தில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இடம் பெறுகிறது.’’
Related Tags :
Next Story