ரூ.300 கோடியில் புராண படம் - கர்ணன் வேடத்தில் விக்ரம்
ரூ.300 கோடியில் தயாராகும் புராண படத்தில், கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கிறார்.
மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஏற்கனவே தமிழில் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் தான வீரா சூர கர்ணா ஆகிய படங்கள் வந்துள்ளன. இப்போது ‘மகாவீர் கர்ணா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். விமல் இயக்குகிறார்.
தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் தயாராகிறது. ரூ.300 கோடி செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். பாகுபலி, 2.0 படங்களுக்கு பிறகு அதிக செலவில் இந்த படம் உருவாகிறது. இதில் இந்தி நடிகர்களும் நடிக்கின்றனர். ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். படத்தில் விக்ரம் நடிக்கும் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் முதலில் கர்ணன் வேடத்தில் மலையாள நடிகர் பிருதிவிராஜ் நடிப்பதாக இருந்தது. அவர் லூசிபர் என்ற படத்தை இயக் கும் பணிகளில் தீவிரமாக இருந்ததால் விக்ரமை தேர்வு செய்தனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. பாகுபலி அரங்குகளுக்கு இணையாக அதிக பொருட்செலவில் புராண காலத்து அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
படம் குறித்து டைரக்டர் விமல் கூறும்போது, “இந்த படத்தின் கதையை தயார் செய்ய 3 வருடம் உழைத்து இருக்கிறோம். சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் நடித்த கர்ணன் படங்களை விட இது வித்தியாசமாக இருக்கும். நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது” என்றார்.
Related Tags :
Next Story