எங்கள் நட்பு தொடரும்: “அஞ்சலி காதலி அல்ல; தோழிதான்!” - நடிகர் ஜெய்


எங்கள் நட்பு தொடரும்: “அஞ்சலி காதலி அல்ல; தோழிதான்!” - நடிகர் ஜெய்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:53 PM GMT (Updated: 13 Feb 2019 10:53 PM GMT)

“நடிகை அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று நடிகர் ஜெய் கூறினார்.

சென்னை,

‘பகவதி’ படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர், ஜெய். ‘சென்னை-28,’ ‘சுப்ரமணியபுரம்’, ‘சரோஜா’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜருகண்டி’, ‘ராஜாராணி’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவரும், நடிகை அஞ்சலியும், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாக பேசப்படுகிறது. இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து ஜெய்யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ் பட உலகில் உங்கள் ‘மார்க்கெட்’ எப்படி இருக்கிறது?

பதில்:- எனக்கு இப்போது கை நிறைய படங்கள் உள்ளன. நான் நடித்த ‘பார்ட்டி’, ‘நீயா-2’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இப்போது, ‘மதுரராஜா’ என்ற மலையாள படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறேன். இருவரும் அண்ணன்-தம்பியாக நடித்து வருகிறோம். எனக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

கேள்வி:- உங்களுடன் ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் மிக மென்மையானவர் யார்?

பதில்:- நயன்தாராதான். எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் அவர்தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு திருமணம் செய்துவைக்க மணப்பெண் தேடி வருவதாக ஒரு தகவல் வெளியானதே?

பதில்:- அது வதந்தி. திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார்.


Next Story