தனது வாழ்க்கையை படமாக்கும் கங்கனா ரணாவத்


தனது வாழ்க்கையை படமாக்கும் கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:30 PM GMT (Updated: 15 Feb 2019 9:35 PM GMT)

நடிகை கங்கனா ரணாவத், தனது வாழ்க்கையை படமாக்க உள்ளார்.


தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் காதலித்து கைவிட்டதாக குற்றம் சாட்டினார். இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் மோதிக்கொண்டனர்.

சமீபத்தில் திரைக்கு வந்த மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாய் வேடத்தில் நடித்து இருந்தார். இதில் சில காட்சிகளை டைரக்டும் செய்தார். இந்த நிலையில் தனது வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக கங்கனா ரணாவத் அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

“மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதால் இவ்வளவு உயரத்தை அடைந்து இருக்கிறேன். அடுத்து எனது வாழ்க்கை கதையை படமாக்க முடிவு செய்துள்ளேன். இந்த படத்தை நானே டைரக்டு செய்கிறேன். 12 வாரங்களுக்கு முன்பு எனது வாழ்க்கையை திரைக்கதையாக எழுதுவதாக விஜயேந்திரா கேட்டுக்கொண்டார்.

நான் அதிர்ச்சியானேன். பின்னர் யோசிக்கவும் செய்தேன். அதன்பிறகு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அனுமதி வழங்கினேன். எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் படத்தில் காட்சிப்படுத்தப்படும். ஆனால் யாருடையை பெயரையும் குறிப்பிடமாட்டோம்.

சினிமா துறைக்கு சம்பந்தம் இல்லாத நான் நடிகையாகி இவ்வளவு வெற்றிகள் பெற்று தேசிய விருது பெற்றது வரை அனைத்து விஷயங்களும் படத்தில் சொல்லப்படும்” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.



Next Story