துணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்


துணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 9:48 PM GMT)

துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, நடிகர் மற்றும் நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு நடிகர்-நடிகைகள் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், “புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலால் நான் மனம் உடைந்து போனேன். தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் அக்‌ஷய்குமார், “மத்திய பாதுகாப்பு படையினர் மீது நடந்த கொடுமையான தாக்குதல் நமது நம்பிக்கையை தகர்த்துள்ளது. இந்த சம்பவத்தை நம்மால் மறக்க முடியாது. உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சாந்தியையும் துயருற்ற குடும்பத்தினருக்கு வலிமையையும் கடவுள் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, “துணை ராணுவத்தினர் மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல், வெறுப்புகள் விடையாகாது. உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் காயம் அடைந்த வீரர்களுக்கும் வலிமை சேரட்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சல்மான்கான், “நமது நாட்டின் அன்பிற்குரிய வீரர்களுக்கும், நமது குடும்பங்களை காப்பாற்ற இன்னுயிரை கொடுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகை சபனா ஆஸ்மி, “பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். இந்த கொலை வெறி தாக்குதல் மூளையற்றவர்கள் செயல். இதனை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர்கள் விஷால், பிரபுதேவா, அபிஷேக் பச்சன், பிரகாஷ்ராஜ், நடிகை அனுஷ்கா சர்மா உள்பட பலர் டுவிட்டரில் கண்டித்து உள்ளனர்.



Next Story