திருமணம் செய்ததாக நடிகர் அவதூறு: நடிகை அதிதி மேனன், போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்


திருமணம் செய்ததாக நடிகர் அவதூறு: நடிகை அதிதி மேனன், போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 7:42 PM GMT)

நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து நடிகர் அபிசரவணன் மீது புகார் மனு கொடுத்தார்.

தமிழில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் சரவணகுமார் என்ற அபி சரவணன். இவர் சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சென்னை வளசரவாக்கம் பாலாஜி நகரில் வசிக்கிறார். அபிசரவணனும் பட்டதாரி படத்தில் நடித்த அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், பிறகு கருத்து வேறுபடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் அபிசரவணனை சிலர் காரில் கடத்தி விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தேடி வந்த நிலையில் திடீரென்று அபிசரவணன் வீட்டுக்கு திரும்பி தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார். 

இந்த நிலையில் நடிகை அதிதி மேனன் நேற்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கமி‌ஷனரை சந்தித்து அபிசரவணன் மீது புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘‘அபிசரவணன் என்ற சரவணகுமார் என்பவர் எனக்கு கணவர் இல்லை. அவரை நான் கடத்தவும் இல்லை. ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அப்போது இருவரும் காதலித்தோம். பின்னர் அபிசரவணன் நடவடிக்கை பிடிக்காததால் பிரிந்து விட்டேன். ஆனால் எனக்கு எதிராக அபிசரவணன் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்.  அவரை நான் பதிவு திருமணம் செய்துகொண்டதுபோல் போலியான தஸ்தாவேஜுகளை தயார் செய்துள்ளார். நான் அவரது மனைவி என்று சமூக வலைத்தளத்திலும் அவதூறுகளை பரப்புகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அதிதி மேனன் கூறினார். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story