அதிதி மேனன் புகாரை சட்டப்படி சந்திப்பேன் -நடிகர் அபிசரவணன்
அதிதி மேனன் புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகர் அபிசரவணன் கூறினார்.
நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:-
“நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். நான் வெளியூர் சென்றபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதிதி மேனனை என்னுடன் சேர்த்து வைக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
திருமணம் நடக்கவில்லை என்றும், போலி பதிவு திருமண தஸ்தாவேஜுகளை வைத்து நான் மிரட்டுவதாகவும் அவர் கூறுவதில் உண்மை இல்லை. திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சமூக சேவைக்காக திரட்டிய பணத்தை வைத்து வீடு, கார்கள் வாங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.
கடன் வாங்கித்தான் வீடு, கார்களை வாங்கி உள்ளேன். அதிதி மேனன் ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் கூறியுள்ளார். ஒரு டைரக்டர் மீதும் குற்றச்சாட்டு சொன்னார். அதிதி மேனனுடன் சமரசம் செய்து வைப்பதாக சிலர் காரில் அழைத்து சென்று வழக்கை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டினார்கள். அவரை எனது மனைவியாக ஏற்க இப்போதும் தயாராக இருக்கிறேன். புகாரை சட்டப்படி சந்திப்பேன்”
இவ்வாறு அபிசரவணன் கூறினார்.
Related Tags :
Next Story