வித்யாபாலனை சந்தித்து மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்


வித்யாபாலனை சந்தித்து மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:30 PM GMT (Updated: 22 Feb 2019 6:46 PM GMT)

வித்யாபாலனை சந்தித்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

தமிழில் 2015-ல் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கிலும் அதிக படங்களில் வந்தார். சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

இந்த படத்தில் திறமையாக நடித்து இருந்ததாக பாராட்டுகள் குவிந்தன. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்மம் என்ற 18-ம் நூற்றாண்டு காலகட்டத்து சரித்திர படத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். இதில் பிரபுதேவா, சுனில் ஷெட்டி, அர்ஜுன், சுதீப், மஞ்சுவாரியர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் சாவித்திரி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு ஆந்திராவில் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மேலும் சில நடிகர்-நடிகைகளும் விருதுகள் பெற்றனர். விழாவில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வித்யாபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகைகள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான த டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற வித்யாபாலனுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்து அதை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். வித்யாபாலனை சந்தித்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

Next Story