நாடாளுமன்ற தேர்தலில் “ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும்” : நடிகர் விஷால் வேண்டுகோள்


நாடாளுமன்ற தேர்தலில் “ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும்” : நடிகர் விஷால் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Feb 2019 12:00 AM GMT (Updated: 27 Feb 2019 9:20 PM GMT)

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் வரிந்து கட்டியுள்ளன.

ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் ரசிகர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அவருக்கு டுவிட்டரில் ரஜினி வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தேர்தலில் முதல்முறையாக போட்டியிட இருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் பொதுவாழ்விலும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன் “எனது 40 ஆண்டுகால நண்பரே நல்லவர் துணை நின்றால் நாற்பதும் எளிதே, நாளை நமதே” என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் தனக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்று மறைமுகமாக அவர் அழைப்பு விடுத்ததாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் தேர்தலில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர், “ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சிக்காக அல்ல. நட்சத்திர விழா வரவேற்பு நிகழ்ச்சிக்காக அல்ல. சினிமா விழாக்களுக்காகவும் அல்ல. எந்த விஷயத்துக்காகவும் அல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒன்று சேருங்கள். ஆமாம் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும்” என்று கூறியுள்ளார். இருவரும் இணைந்து செயல்படுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Next Story