தாய்மைக்கு பிறகும் தளராத உடல் அழகுக்கு.. நடிகைகள் தரும் ஆலோசனை


தாய்மைக்கு பிறகும் தளராத உடல் அழகுக்கு.. நடிகைகள் தரும் ஆலோசனை
x
தினத்தந்தி 3 March 2019 6:06 AM GMT (Updated: 3 March 2019 6:06 AM GMT)

பெண் தாய்மையடைவது மகத்துவமான அனுபவம். பிரசவிப்பது அற்புதமான நிகழ்வு. ஆனால் அதன் பின் பெண்களுக்கு ஏற்படும் மிகபெரிய கவலை, உடல் எடையை பற்றியதுதான்.

பெண் தாய்மையடைவது மகத்துவமான அனுபவம். பிரசவிப்பது அற்புதமான நிகழ்வு. ஆனால் அதன் பின் பெண்களுக்கு ஏற்படும் மிகபெரிய கவலை, உடல் எடையை பற்றியதுதான். தாய்மையும், பிரசவமும் அவர்கள் உடல் எடையை தாறுமாறாக உயர்த்திவிடுகிறது. அதனால் பல பெண்கள் மனதளவில் தளர்ந்துபோகிறார்கள்.

பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போய்விடுகிறார்கள். இதற்கு திருமணமான நடிகைகளும் விதிவிலக்கு இல்லை. அழகுத் தேவதையாக உலாவந்த நடிகை ஐஸ்வர்யா ராய் குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதனால் மனதொடிந்து போன அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. அதனால் பல மாதங்களாக அவர் தனது போட்டோ எதுவும் வெளியே வராதபடி பார்த்துக்கொண்டார். தனிமை வாழ்க்கை நடத்தினார். பின்பு தான் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளை மேற்கொண்டு தனது உடல் எடையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தார். பல நடிகைகள் மீண்டும் இயல்பான எடைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டதும் உண்டு. அதனால்தான் நடிகைகள் திருமணம் செய்துகொண்டாலும், தாய்மை அடைவதை தள்ளிப்போட்டுவிடு கிறார்கள்.

ஆனால் இப்போது திருமணமான பெண்களுக்கு விசேஷ உடற்பயிற்சி முறைகள் உள்ளன. அவர் களுக்கு உணவு பற்றி ஆலோசனை வழங்கவும் சிறந்த நிபுணர்கள் உள்ளனர். நடிகைகள் அதனை முறையாக பின்பற்றவும் செய்கிறார்கள். அத்தகைய நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைப்படி தங்கள் வாழ்வியல் முறைகளிலும் அவர்கள் சிறந்த மாற்றங்களை உருவாக்குகிறார்கள். கட்டுடலுக்காக அவர்கள் தங்களை வருத்திக்கொள்வதால், பல நடிகைகள் குழந்தை பெற்ற பின்பும் கட்டுக்குலையாத உடல் அழகோடு வலம் வருகிறார்கள்.

திருமணத்திற்கு பின்பு உடல் எடை அதிகரிப்பது பெண்களைப் பொறுத்தவரையில் பெரும் பிரச் சினையாக இருப்பதால், பிரபல நடிகைகள் சிலர் தங்கள் அனுபவங்களை, தாய்மார்களுக்கு ஆலோசனையாக வழங்குகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்:

குழந்தை பிறந்த பின்பு என் உடல் எடை மிகவும் அதிகரித்துவிட்டது. குழந்தையை தனியே விட்டு விட்டு வெளியிலும் போக முடியாத நிலையில் வீட்டிலேயே உடற்பயிற்சியை ஆரம்பித்தேன். தாயான பின்பு மருத்துவர் அறிவுரைப்படிதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிசேரியன் என்றால் 40 நாட்கள் கழித்துதான் உடற்பயி்ற்சி செய்ய வேண்டும். சுகபிரசவம் என்றால் ஒரு வாரத்தில் ஆரம் பித்துவிடலாம். நமது உடல்வாகுக்கு எந்த பயிற்சி ஏற்றது என்பதை அதற்குரிய நிபுணர்கள்தான் நமக்கு கூறவேண்டும். எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி உடற்பயிற்சி பொருந்தாது.

உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உணவிலும் கட்டுப்பாடு தேவை. எனக்கு எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவு வகைகள் பிடிக்கும். உடல் எடையை குறைக்க அவைகள் மீதான ஆசையை துறந்தேன். ‘ஜங்புட்’ அறவே கிடையாது. வேகவைத்த காய்கறிகள், பழவகைகள், சாலட் போன்ற உணவு வகைகள் என் சாப்பாட்டில் இடம் பிடித்தது. ஒரு சேர அனைத்தையும் கடைப்பிடித்த பின்புதான் எனது உடல் எடையில் குறிப்பிட்ட மாற்றம் தெரிந்தது, மகிழ்ச்சியோடு அதை தொடர்ந்தேன். எப்படியோ என் உடல் அழகை மீட்டெடுத்துவிட்டேன். இப்போது நடிக்கவும் செய்கிறேன். இதுபோதும், வேறு எதுவும் எனக்கு தேவையில்லை.

மலைய்கா அரோரா கான்:

குழந்தை பிறந்த பிறகு எல்லா பெண்களையும்போல் என் உடல் எடையும் கூடிவிட்டது. எனக்கென்று எதையும் செய்ய நேரமில்லை என்றாகிவிட்டது. அதே நேரத்தில் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு பழைய நிலைக்கு திரும்பியதைப் பார்த்தேன். என் தவறு புரிந்தது. கஷ்டம் தான் ஆனால் முடியாதது எதுவுமில்லை. முயற்சித்தேன். உடற்பயிற்சி, உணவு என்று இரு முனை போரில் வெற்றி கிடைத்தது, இப்போது பழைய அழகோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அழகு, பெண்களின் மனபலத்திற்கு மிக அவசியம்.

ஷில்பா ஷெட்டி:

பெண்கள் திருமணத்திற்கு பின்பு உடலழகை பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். என் மகன் பிறந்தவுடன் என் எடை 20 கிலோ அதிகரித்து 80 கிலோ ஆனது. மேலும் அதிகரித்துக்கொண்டே போனது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டாவது குழந்தை சிசேரியன் என்பதால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. யோசித்தபடியே கிட்டதட்ட நான்கு வருடங்களை வெட்டியாகவே கழித்தேன். பிறகு எனக்காகவும் நேரம் ஒதுக்க முடிவு செய்தேன். என் இரு குழந்தைகளையும் எப்போதும் என் கண்காணிப்பில் வைத்திருந்தேன். அவர்களோடு ஓடியாடி வேலை செய்ததில் தினமும் 500 கலோரி கரைந்தது. அதற்குமேல் உடற்பயிற்சி செய்து பழைய நிலைக்கு வந்தேன். திடீரென்று ஏற்படுத்திக்கொள்ளும் உணவுக் கட்டுப்பாடு உடலுக்கு ஆபத்தானது. நான் உடற்பயிற்சியிலும், உணவுக்கட்டுப்பாட்டிலும் அதிரடியாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உடலுக்கு ஏற்ற விதத்தில் படிப்படியாக இந்த மாற்றங்களை உருவாக்கினேன். எல்லா பெண்களுமே அதிரடியாக உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவிடக்கூடாது.

கரீஷ்மா கபூர்:

நான் இரண்டு குழந்தைகளின் தாய். ஆனால் என்னை பார்ப்பவர்கள் அதை நம்புவதில்லை. அதனால் நான் எப்படி என் கட்டுக்குலையாத உடலை பாதுகாக்கிறேன் என்று என்னிடம் ஆலோசனை கேட்கத் தொடங்கிவிடுவார்கள். இதில் ஒரு ரகசியமும் இல்லை. தினசரி உடற்பயிற்சியில்தான் இந்த உண்மை அடங்கியிருக்கிறது. குழந்தை பிறந்த உடன் தாயின் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தூங்கத்தோன்றும். ஆனால் நான் விடாப்பிடியாக குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்டுவிடுவேன். குழந்தைகளை கவனித்ததால் எனக்கு தூக்கமில்லா இரவுகள் உண்டு. ஆனாலும் உடற் பயிற்சியை விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருமுறை விட்டுவிட்டால் உடலுக்கு சோம்பேறித்தனம் வந்துவிடும். பள்ளியில் படிக்கும்போது நீச்சல் பயிற்சி பெற்றேன். இப்போது இரு குழந்தைகளுடனும் நீச்சல் பயிற்சிக்கு போகிறேன். லிப்டை தவிர்த்து படிக்கட்டில் வேகமாக நடப்பேன். எனக்கென்று ஒரு தனி பயிற்சியாளரை நியமித் திருக்கிறேன். அவர் சொல்கிறபடி பயிற்சி செய்கிறேன். எனக்கு சிப்ஸ், பிரியாணி, கேக், ஐஸ்கிரீம் எல்லாம் பிடிக்கும். எப்போதாவது ஒருநாள் அதை சாப்பிடுகிறேன். அதற்கேற்ப அடுத்த நாள் உடற்பயிற்சியை கடுமையாக்கிக்கொள்வேன். உணவுக் கட்டு்ப்பாட்டில் தாய்மார்கள் அதிக அக்கறை காட்டவேண்டும். ஏன்என்றால் உடல் எடையை அதிகரிக்கவிட்டால் மீண்டும் அதை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடவேண்டியதிருக்கும்.

கஜோல்:

நானும் இரண்டு குழந்தைகளின் தாய். பெண்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு கலை. நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் இந்தக் கலை தெரிந்திருக்க வேண்டும். நம் உடல் நமக்கு பயன்பட வேண்டு மானால் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். முறையான உணவுப் பழக்கம் மிகவும் தேவை. குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை கட்டுக்குள் வைத் திருப்பது அனைத்து பெண்களுக்குமே ஒரு சவாலான விஷயம்தான்.

லாரா தத்தா:

கர்ப்பகாலத்திலும் லாரா தத்தா யோகாசனத்தை தொடர்ந்தார்..
எனக்கு எப்போதுமே யோகாசனத்தில் ஆர்வம் உண்டு. பிரசவத்திற்கு பின்பும் அதை தொடர்ந்தேன். எனது பயிற்சியாளர் டோனியா கிளாக், எனது உடல் நிலைக்குதக்கபடி சிறப்பாக பயிற்சியளித்தார். அவர் கற்றுத்தருவதை மட்டும்தான் நான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவார். நான் சைவம் என்பதால் நிறைய காய்கறி, பழங்களை சாப்பிட்டு வந்தேன். குழந்தை பிறப்பதற்கு முன்பு செய்யும் யோகாசனம் மிகவும் முக்கியமானது, அது குழந்தை பிறப்பை எளிமையாக்குகிறது. எப்போதும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்பும் பெண்கள், இப்போதிருந்து யோகாசனம் செய்துவரவேண்டும்.

Next Story