‘இம்சை அரசன்’ விவகாரம்: வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?


‘இம்சை அரசன்’ விவகாரம்: வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?
x
தினத்தந்தி 8 March 2019 11:20 PM GMT (Updated: 8 March 2019 11:20 PM GMT)

இம்சை அரசன் பட விவகாரத்தில், வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை வருமா என தகவல் வெளியாகி உள்ளது.


சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து 2006-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இம்சை அரசன் 23-ம் புலிகேலி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்து அந்த படத்திலும் வடிவேலுவையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்து அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பையும் துவக்கினர்.

இதில் சில நாட்கள் நடித்த வடிவேலு, ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

படம் நின்றுபோனதால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஷங்கர் கூறினார். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர்.

தற்போது இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பதாகவும், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை முடிக்காமல் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று வற்புறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story