பிரதமர் கோரிக்கையை ஏற்று தேர்தல் விழிப்புணர்வில் ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா


பிரதமர் கோரிக்கையை ஏற்று தேர்தல் விழிப்புணர்வில் ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா
x
தினத்தந்தி 14 March 2019 11:15 PM GMT (Updated: 14 March 2019 6:30 PM GMT)

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்போர் சதவீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமி‌ஷன் இறங்கி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நடிகர்–நடிகைகளை இதில் ஈடுபடுத்தி வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. 

இதுபோல் பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பிரபலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, சல்மான்கான், அமீர்கான், நடிகைகள் அனுஷ்கா சர்மா, அலியாபட், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசதவீதம் அதிகரிக்க அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், வாக்களிப்பது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட என்றும் தெரிவித்து இருந்தார். 

பிரதமரின் வேண்டுகோளை ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஏற்று உள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், ‘‘செய்து காட்டுவோம். நன்றி’’ என்று கூறியுள்ளார். அனுஷ்கா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘வாக்களிப்பது அனைவரின் உரிமை. எல்லோரும் கைகோர்த்து இந்த ஜனநாயக பணியில் ஈடுபடுவோம். வாக்களித்து நாட்டையும் உங்களையும் மேம்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story