சிம்புவின் ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதா? பட அதிபர் விளக்கம்


சிம்புவின் ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதா? பட அதிபர் விளக்கம்
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 5:10 PM GMT)

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த மாதம் வந்தது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் அவர் நடிப்பார் என்றும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை பட வேலைகள் தொடங்கவில்லை. சிம்புவுடன் நடிக்கும் இதர நடிகர்-நடிகைகள் பற்றிய விவரமும் வெளியாகவில்லை. இதனால் மாநாடு படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இந்த படத்துக்கு பதிலாக வேறு படத்தில் நடிக்க சிம்பு தயாராகிறார் என்றும் பேசப்பட்டது.

இதனை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், “மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை. படத்தை கைவிடவில்லை. கதைவிவாதம் மற்றும் முன்தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் சிம்பு தனது உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் மாறி இருக்கிறார். லண்டன் சென்ற அவர் சில நாட்கள் தங்கி இருந்து எடையை குறைத்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறார். தற்போதைய தோற்றத்தின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story