கொலை மிரட்டல் விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் - துப்பாக்கி உரிமம் கேட்க முடிவு


கொலை மிரட்டல் விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் - துப்பாக்கி உரிமம் கேட்க முடிவு
x
தினத்தந்தி 26 March 2019 10:38 PM GMT (Updated: 26 March 2019 10:38 PM GMT)

கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார்.


அதிரடி புகார்கள் கூறி திரையுலகையே அதிர செய்தவர், நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது ‘ரெட்டி டைரி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா பைனான்சியர் சுப்பிரமணி உள்பட 2 பேர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். சில மணி நேரங்களிலேயே அந்த புகாரை அவர் திரும்ப பெற்றார்.

இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தயாரிப்பாளர் ரவிதேவனுடன் வந்த ஸ்ரீரெட்டி புகார் மனுவை அளித்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எனக்கு நடந்த மனித உரிமை மீறல்களை புகாராக அளித்துள்ளேன். ரெட்டி டைரி படப்பிடிப்புக்காக சென்னை வந்தேன். சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக ரெட்டி டைரி படப்பிடிப்பு நடைபெறவில்லை. பட தயாரிப்பாளர் ரவிதேவனுக்கும், படக்குழுவினருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும், உயிருக்கு ஆபத்து உள்ளதால் துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் கேட்டு போலீஸ் கமிஷனரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

Next Story