‘மீ டூ’ இயக்கத்தை நயன்தாரா ஆதரிக்கவில்லையா? - டுவிட்டரில் சித்தார்த்-விக்னேஷ் சிவன் மோதல்


‘மீ டூ’ இயக்கத்தை நயன்தாரா ஆதரிக்கவில்லையா? - டுவிட்டரில் சித்தார்த்-விக்னேஷ் சிவன் மோதல்
x
தினத்தந்தி 26 March 2019 11:30 PM GMT (Updated: 26 March 2019 11:03 PM GMT)

மீ டூ இயக்கத்துக்கு நயன்தாராவின் ஆதரவு குறித்து டுவிட்டரில் சித்தார்த்-விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டது.

நடிகைகள் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்திய ‘மீ டூ’ இயக்கம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த இயக்கத்துக்கு நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் இதுகுறித்து கருத்து சொல்லவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கொலையுதிர் காலம் பட விழாவில் நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக ராதாரவிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. நடிகைகள் பலர் அவரை கண்டித்தனர். நயன்தாராவும் ராதாரவியை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டார். ராதாரவி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்த சர்ச்சை குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த், “மீ டூ இயக்கம் சம்பந்தமாக திரைத்துறையினரின் மவுனம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நீங்கள் பாதித்தால் மட்டுமே அதுகுறித்து பேசுவீர்கள் என்றால் இது துணிச்சலான செயல் அல்ல” என்று கூறியிருந்தார். நயன்தாரா மீ டூ இயக்கம் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்று அவரை குற்றம் சாட்டுவதுபோல் சித்தார்த் பதிவு இருந்ததாக பேச்சு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் ‘மீ டூ’வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை. அமைதியாக இருக்கும் ஒருவரை தாக்குவது வேதனையானது” என்று கூறியுள்ளார்.


Next Story