எனக்காக அப்பா வாய்ப்பு கேட்காவிட்டாலும் ‘ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது’ படவிழாவில், சூர்யா ருசிகர பேச்சு


எனக்காக அப்பா வாய்ப்பு கேட்காவிட்டாலும் ‘ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது’ படவிழாவில், சூர்யா ருசிகர பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 10:53 AM GMT (Updated: 27 March 2019 10:53 AM GMT)

‘அப்பா எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்காவிட்டாலும், ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது’ என்று படவிழாவில் நடிகர் சூர்யா பேசினார்.

சென்னை,

நடிகர் சூர்யா தயாரித்துள்ள ‘உறியடி-2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா, ‘உறியடி-2’ படத்தின் டைரக்டர் விஜயகுமார், ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், வினியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சூர்யா பேச்சு

விழாவில், சூர்யா பேசியதாவது:-

இங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்னிடம், நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விட்டோமோ என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு.

அவர்களுடைய வேலையில் குறுக்கீடு செய்யவும், ஆலோசனை சொல்லவும், என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்கவும், துணையாக உடன் நிற்கவும் பிடிக்கும். எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளை செய்ய முடியுமோ, அதைத்தான் இந்த படத்துக்கு செய்திருக்கிறேன்.

சந்தித்தது கிடையாது

ஒருவர், சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா? என்ற பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் இயக்குனர் விஜயகுமார் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதை அறிந்து, அந்த அளவுக்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர், டைரக்டர் விஜயகுமார்.

எங்க அப்பா நான் நடித்த படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. இருந்தாலும், நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், ‘உறியடி’ படத்தை எடுத்த விஜயகுமார் ஆச்சரியப்படுத்தினார். இந்த படம் உங்களை தொந்தரவு பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

Next Story