ஆந்திராவில் திரையிட ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்துக்கு கோர்ட்டு தடை


ஆந்திராவில் திரையிட ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்துக்கு கோர்ட்டு தடை
x
தினத்தந்தி 29 March 2019 10:45 PM GMT (Updated: 29 March 2019 7:08 PM GMT)

ஆந்திராவில் லட்சுமி என்.டி.ஆர் படத்தினை திரையிட கோர்ட்டு தடை விதித்துள்ளது.


என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து ‘என்.டி.ஆர். கதாநாயகடு’, என்.டி.ஆர். மகாநாயகடு என்று 2 படங்கள் வந்தன. இதில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி மற்றும் ஆட்சியை பறித்த சந்திரபாபு நாயுடு ஆகியோர் பற்றிய காட்சிகள் இடம்பெறவில்லை.

இதனால் அந்த படங்களுக்கு போட்டியாக ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார். இதில் லட்சுமி பார்வதியை பெருமைப்படுத்தியும், என்.டி.ராமராவுக்கு துரோகம் செய்து ஆட்சியை சந்திரபாபு நாயுடு கைப்பற்றியது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் லட்சுமி பார்வதியாக யாக்னா ஷெட்டி நடித்துள்ளார்.

இந்த படம் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும், எனவே தேர்தல் காலத்தில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து படத்தை தேர்தல் கமிஷனுக்கு தயாரிப்பாளர் அனுப்பிவைத்தார். படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறி படத்தை வெளியிட அனுமதித்தனர்.

இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த கோர்ட்டு ஆந்திராவில் மட்டும் ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து விசாரணையை ஏப்ரல் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. மற்ற மாநிலங்களில் படம் நேற்று வெளியானது.



Next Story