மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபுதேவா


மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபுதேவா
x
தினத்தந்தி 2 April 2019 11:00 PM GMT (Updated: 2 April 2019 5:45 PM GMT)

இந்தியில் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

முன்னணி நடிகராக இருக்கும் பிரபுதேவா டைரக்டராகவும் முத்திரை பதித்துள்ளார். தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். போக்கிரி படத்தை இந்தியில் சல்மான்கான் நடிக்க ‘வாண்டட்’ என்ற பெயரில் டைரக்டு செய்தார். இந்த படம் வசூல் குவித்தது. 

தொடர்ந்து அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கான் நடித்த ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ மற்றும் ராமையா வாஸ்தாவையா, ஆர்.ராஜ்குமார், சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களை இயக்கி இந்தி பட உலகிலும் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் இந்தியில் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகிறார். 

இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் முதல் பாகம் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 2010–ம் ஆண்டு வெளியானது. இரண்டாம் பாகத்தை அர்பாஸ்கான் இயக்கினார். தபாங் 3–ம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி உள்ளது. இதனை சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். சல்மான்கான் ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடிக்கிறார். பிரபுதேவா நடித்துள்ள தேவி–2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பொன்மாணிக்கவேல் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

Next Story