டைரக்டர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு?


டைரக்டர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு?
x
தினத்தந்தி 4 April 2019 10:45 PM GMT (Updated: 4 April 2019 5:44 PM GMT)

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து ‘கொலையுதிர் காலம்’ படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசும்போது நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. நடிகர் சங்கமும் கண்டித்தது. 

நயன்தாராவின் காதலரும் டைரக்டருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்த படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டனர் என்று நினைத்தேன். பொருத்தமற்ற நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினர்’’ என்று தெரிவித்தார். 

விக்னேஷ் சிவன் கைவிடப்பட்ட படம் என்று கூறியதால் படத்தின் வியாபாரம் பாதித்துள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன்னால் கொலையுதிர் காலம் படத்தை வாங்கிக்கொள்வதாக சொன்ன வினியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று பின்வாங்கி விட்டனர். 

படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது. இதனால் படத்தின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்கும்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து இயக்குனர் சக்ரி டோலட்டி உள்ளிட்ட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story