நடிகைகளை முதன்மைப்படுத்த விரும்புவதில்லை : கதாநாயகர்கள் மீது ஆண்ட்ரியா சாடல்


நடிகைகளை முதன்மைப்படுத்த விரும்புவதில்லை : கதாநாயகர்கள் மீது ஆண்ட்ரியா சாடல்
x
தினத்தந்தி 10 April 2019 11:30 PM GMT (Updated: 10 April 2019 7:11 PM GMT)

ஆண்ட்ரியா ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது மாளிகை என்ற திகில் படத்தில் இருவேடங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகனாக ஜே.கே. மற்றும் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கன்னட இயக்குனர் தில் சத்யா இயக்கி உள்ளார்.

சாந்தி பவானி என்டெர்டெயின்மென்ட் சார்பில் கமல் போரா, ராஜேஷ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டு பேசியதாவது:-

“மாளிகை படத்தை முதலில் கன்னடத்தில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் உள்ளது எனவே தமிழ் படமாக எடுப்போம் என்று தயாரிப்பாளர் கூறினார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் உள்ளது என்று தோன்றி இருக்கிறது.

ஆனால் தமிழ் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அந்த உணர்வு ஏற்படவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இதனை எடுத்துள்ளனர். இதுபோன்ற படங்களுக்கும் காதல், சண்டை காட்சிகளில் நடிக்க கதாநாயகர்கள் தேவை. ஆனால் தங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் படங்களில் கதாநாயகர்கள் நடிப்பது இல்லை. மாளிகை படம் சிறப்பாக வந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது ‘அபூர்வ வகை ரத்த குரூப்பை சேர்ந்தவர்களை மையமாக வைத்து வித்தியாசமான படமாக மாளிகை தயாராகி உள்ளது’ என்றார். விஜய் ஆண்டனியும் நிகழ்ச்சியில் பேசினார்.

Next Story