பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணமா? - பட விழாவில் நடிகை கஸ்தூரி பேச்சு


பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணமா? - பட விழாவில் நடிகை கஸ்தூரி பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:16 PM GMT (Updated: 16 April 2019 11:16 PM GMT)

பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணமா என பட விழா ஒன்றில் நடிகை கஸ்தூரி பேசினார்.


அமெரிக்கவாழ் இந்தியரான ஆரோக்கியசாமி கிளமென்ட் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘முடிவில்லா புன்னகை.’ டிட்டோ, ரக்‌ஷிதா, கூல் சுரேஷ், டெலிபோன் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

“நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவாக எடுக்கிறோம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். பொள்ளாச்சி சம்பவத்தையும் ஹாசினிக்கு நேர்ந்த கொடுமையையும் படமாக எடுக்க முடியுமா? அப்படி எடுத்தால் நம்மால்தான் பார்க்க முடியுமா?

சினிமாவை பார்த்து சமூகம் கெட்டுப்போகிறது என்றும் திரைப்படங்களால்தான் பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறது என்றும் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மக்கள் செய்யும் குற்றங்களுக்கு சினிமாவை குறை சொல்வதை நிறுத்த வேண்டும். சினிமாவை பார்த்துதான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சொன்னால் அப்படிப்பட்ட வலிமையற்ற மனிதர்கள் சினிமா பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாக இருக்க வேண்டும். சுயவிருப்பத்துக்கும் அத்துமீறல்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எங்களுக்கு சமஉரிமை வேண்டாம். பெண்களுக்கு இந்த சமூகத்தில் குறைந்தபட்சம் மரியாதைதந்தால் போதுமானது.” இவ்வாறு கஸ்தூரி பேசினார். டைரக்டர் வேலுபிரபாகரன் உள்பட பலர் விழாவில் பேசினார்கள்.


Next Story