“அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” -நடிகர் கார்த்தி


“அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” -நடிகர் கார்த்தி
x
தினத்தந்தி 28 April 2019 11:34 PM GMT (Updated: 28 April 2019 11:34 PM GMT)

தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியும், ஜோதிகாவும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் இருவரும் அக்காள் தம்பியாக வருகிறார்கள். தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தை ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கிறார்.

ஜித்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இவர் மலையாளத்தில் திரிஷ்யம் என்ற திகில் படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தயாரானது. கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திகில், அதிரடி, குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கார்த்தி டுவிட்டர் பக்கத்தில், “முதல் முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மிகப்பெரிய பலம். அனைவரின் ஆசிர்வாதத்துடன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவும் “இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும் ஜோதிகாவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

Next Story