ரூ.2½ கோடி கூடுதல் செலவானதாக புகார்: விஷாலின் ‘அயோக்யா’ திரைக்கு வருவது திடீர் ரத்து


ரூ.2½ கோடி கூடுதல் செலவானதாக புகார்: விஷாலின் ‘அயோக்யா’ திரைக்கு வருவது திடீர் ரத்து
x
தினத்தந்தி 10 May 2019 11:30 PM GMT (Updated: 10 May 2019 10:38 PM GMT)

ரூ.2½ கோடி கூடுதல் செலவானதாக எழுந்த புகாரால், விஷாலின் ‘அயோக்யா’ படம் திரைக்கு வருவது திடீரென ரத்து செய்யப்பட்டது.


வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயோக்யா. விஷால் கையில் மதுபாட்டிலுடன் போலீஸ் வேனில் அமர்ந்து இருப்பது போன்ற இந்த படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தை நேற்று திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்தனர். இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் அயோக்யா படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்னால் ரசிகர்கள் விஷால் கட்-அவுட்கள் வைத்து கொடி தோரணங்கள் அமைத்து இருந்தனர். இரு தினங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவுகளும் நடந்தன. நேற்று காலை அயோக்யா படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால் படத்தை திரைக்கு கொண்டுவருவதை ரத்து செய்து திடீரென்று தள்ளி வைத்துவிட்டனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது. படத்தின் வியாபாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது. பைனான்ஸ் பிரச்சினையும் இல்லை. படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு இல்லை. ஆனாலும் படத்தை நிறுத்தியது ஏன் என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

படத்தின் பட்ஜெட் ரூ.2.50 கோடி அதிகமாகிவிட்டதாக திரைப்பட வர்த்தக சபையில் படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்ததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், “அயோக்யா படத்தை திரைக்கு கொண்டுவருவதற்கு ஒரு நடிகனாக செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டேன். ஆனாலும் முடியவில்லை. எனக்கும் ஒரு நாள் நேரம் வரும். அதுவரை எனது பயணத்தை நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார்.


Next Story