டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி


டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 8:48 PM GMT)

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய்பல்லவி சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:-

செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரிடம் எளிமையாக கற்றுக்கொள்ளலாம். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம்.

ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் ஆளுக்கொரு இடத்தில் நின்று பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று தெளிவாக சொல்லிக் கொடுப்பார்.

ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார்.

பிறகு சூர்யாவிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது. செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார்.”

இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

Next Story