“எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” - நடிகர் சிம்பு அறிக்கை


“எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” - நடிகர் சிம்பு அறிக்கை
x
தினத்தந்தி 26 May 2019 12:00 AM GMT (Updated: 25 May 2019 8:07 PM GMT)

“எனக்கு எந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்”, என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

சென்னை, 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்துவைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள். இந்தநிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

இந்த தகவலை சிம்பு மறுத்தார். இதுபற்றி அவர் நேற்று இரவு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story