“எனக்கு பிரதமராக ஆசை உள்ளது” -பிரியங்கா சோப்ரா
எனக்கு பிரதமராக ஆசை உள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வருகிறார். நடிப்பு தவிர ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை போன்ற சமூக விழிப்புணர்வு பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆங்கில டெலிவிஷன் தொடர்களில் நடித்து ஹாலிவுட் பட உலகிலும் கால் பதித்து உள்ளார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“எதிர்காலத்தில் நானும், எனது கணவரும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் இந்திய பிரதமர் ஆவேன். அதே மாதிரி எனது கணவரை அமெரிக்க அதிபராக பார்க்க ஆசைப்படுகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். ஆனால் இப்போது ஆசை வந்து இருக்கிறது. அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. திடமாக எண்ணினால் எதுவுமே அசாத்தியம் இல்லை என்பது எனது கருத்து. எனது கணவர் நிக் ஜோனஸ் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story