“மக்களுக்கு பிடிக்கும் படங்களில் நடிப்பேன்” பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு


“மக்களுக்கு பிடிக்கும் படங்களில் நடிப்பேன்” பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு
x
தினத்தந்தி 4 Jun 2019 10:30 PM GMT (Updated: 4 Jun 2019 9:51 PM GMT)

மக்களுக்கு பிடிக்கும் படங்களில் நடிப்பேன் என்று பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி உள்ளார். ரியோ ராஜ், ஷரின் காஞ்ச்வாலா, ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியதாவது:-

“கனா படத்தை நண்பர்களுக்காக தயாரித்தேன். யூடியூப்பில் கலக்கும் ஆளுமைகளையும், தொலைக்காட்சியில் இருந்து வரும் கலைஞர்களை வைத்து படம் செய்ய நினைத்து நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் நிறைவேறி இருக்கிறது. என் போனில் 4 வருடமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல் தான் ரிங்டோன். நல்ல இயக்குனருடன் சேர்ந்து வேலை செய்யலாம், ஆனால் நல்ல மனிதருடன் சேர்ந்து வேலை செய்வது அரிது. நாஞ்சில் சம்பத், மயில்சாமி போன்ற சீனியர்களும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர். கனா படம் மிகப்பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது, டைரக்டர் ஷங்கர் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்.

என்னுடைய முந்தைய படம் சரியாக ஓடவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒரு படம் ஓடவில்லை என்பதற்காக விழுந்து விடமாட்டேன். தொடர்ந்து வெறியோடு ஓடிக்கொண்டே இருப்பேன். எனது அடுத்தடுத்த படங்கள் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும், தோல்வியிலும் என்னுடன் இருக்கும் ரசிகர்கள்தான் எனக்கு பலம்.”

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

Next Story