நடிகர் சங்க தேர்தலையொட்டி 23-ந் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்ய விஷால் கோரிக்கை


நடிகர் சங்க தேர்தலையொட்டி 23-ந் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்ய விஷால் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 9:55 PM GMT)

நடிகர் சங்க தேர்தலையொட்டி 23-ந் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்ய விஷால் வற்புறுத்தி உள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார். இவர்களை எதிர்த்து போட்டியிட புதிய அணி உருவாகி வருகிறது. தேர்தலையொட்டி 23-ந் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்ய விஷால் வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு விஷால் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஜி.ஆர். ஜானகி அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகளை ரத்து செய்து திரையுலகுக்கு விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து 23-ந் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story