நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய கார்த்தி


நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய கார்த்தி
x
தினத்தந்தி 6 Jun 2019 11:30 PM GMT (Updated: 6 Jun 2019 6:43 PM GMT)

நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2017 ஏப்ரல் மாதம் கட்டுமான பணியை தொடங்கினர். அதன்பிறகு கோர்ட்டு தடையால் சில மாதங்கள் பணியை நிறுத்திவிட்டு பின்னர் தடையை நீக்கி மீண்டும் கட்ட தொடங்கினார்கள்.

சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் நட்சத்திர கலை விழாவும் நடத்தி கட்டிட நிதி திரட்டினார்கள். 4 மாடிகளை கொண்ட இந்த கட்டிட பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ஆடிட்டோரியம், 1000 பேர் அமரும் கல்யாண மண்டபம், அலுவலகம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை அமைத்து உள்ளனர். இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டுமான பணிக்கு மேலும் பணம் தேவைப் படுகிறது என்றும், இதற்காக நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்றும் விஷால் கூறியிருந்தார். ஆனால் தற்போது நடிகர் சங்க தேர்தலுக்கான பணிகள் தொடங்கி உள்ளதால் விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடியும், விஷால் ரூ.25 லட்சமும் வழங்கி உள்ளனர்.

Next Story