நடிகை சென்ற கார் மீது மெட்ரோ ரெயில் பால கான்கிரீட் கல் விழுந்து விபத்து
மலையாள நடிகை அர்ச்சனா கவி சென்ற கார் மீது மெட்ரோ ரெயில் பாலத்தில் இருந்து ஒரு கான்கிரீட் கல் விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
கொச்சி,
டெல்லியில் பிறந்து படித்த அர்ச்சனா கவி டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது மலையாள இயக்குநர் லாஸ் ஜோஸ் கண்ணில் பட்டு நடிகையானார். அவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கவி கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது கொச்சி மெட்ரோ ரெயில் தூணில் இருந்து கான்கிரீட் ஸ்லாப் (கல்) ஒன்று அவர் கார் மீது விழுந்தது. இதில் அர்ச்சனா கவி சென்ற கார் சேதமடைந்தது. நல்ல வேளையாக அவருக்கோ, டிரைவருக்கோ எதுவும் ஆகவில்லை.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அர்ச்சனா கவி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் இது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் புகார் செய்தார். இந்த விபத்து குறித்து அர்ச்சனா கவி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினோம். நாங்கள் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு கான்கிரீட் ஸ்லாப் எங்கள் கார் மீது விழுந்தது. கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி டிரைவருக்கு உரிய இழப்பீட்டை வழங்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா கவியின் ட்வீட்டை பார்த்த கொச்சி மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, சம்பவம் குறித்து தகவல் அறிய டிரைவரை நேற்று மாலை தொடர்பு கொண்டோம். இந்த விவகாரம் குறித்து எங்கள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. அசவுகரியத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.
கொச்சி மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலை பார்த்த நெட்டிசன்கள், இது அசவுகரியம் இல்லை, பாதுகாப்பு விஷயம். கார் மீது விழுந்த கான்கிரீட் ஸ்லாப் அந்த வழியாக இருசக்கர வாகனத்திலோ, நடந்து சென்றவர்கள் மீதோ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
We had a narrow (providential) escape. A concrete slab fell on our moving car while we were on the way to the airport. I would request @kochimetro and @KochiPolice to look into the matter and compensate the driver. Also see to it that such things don't happen in future. pic.twitter.com/knDdqC3bwN
— Archana Kavi (@archana_kavi) June 5, 2019
Related Tags :
Next Story