ஓடும் காரில் விழுந்த கான்கிரீட் துண்டு நடிகை அர்ச்சனா கவி உயிர் தப்பினார்


ஓடும் காரில் விழுந்த கான்கிரீட் துண்டு நடிகை அர்ச்சனா கவி உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 7 Jun 2019 11:00 PM GMT (Updated: 7 Jun 2019 6:43 PM GMT)

நடிகை அர்ச்சனா கவி சென்ற கார் மீது பாலத்தில் இருந்து பெயர்ந்து கான்கிரீட் துண்டு விழுந்தது.

தமிழில் அரவான், ஞான கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி. மலையாள முன்னணி நடிகையான இவர் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் அபிஷ் மாத்யூவை காதலித்தார். இருவரும் 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

அர்ச்சனா கவி வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் கொச்சி விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். கொச்சி மெட்ரோ பாலத்துக்கு கீழே அந்த கார் வந்தபோது திடீரென்று பாலத்தில் இருந்து பெயர்ந்த ஒரு கான்கிரீட் துண்டு காரின் மீது விழுந்தது.

டிரைவர் நிலை தடுமாறி காரை ஓரமாக நிறுத்தினார். கான்கிரீட் துண்டால் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதை பார்த்ததும் பின் இருக்கையில் இருந்த அர்ச்சனா கவியும், குடும்பத்தினரும் அதிர்ச்சியானார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

உடைந்த கார் கண்ணாடி மற்றும் கான்கிரீட் துண்டை டுவிட்டரில் பதிவிட்ட அர்ச்சனா கவி, மெட்ரோ நிர்வாகம் டிரைவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு பதில் அளித்த மெட்ரோ நிர்வாகம், “இதுகுறித்து எங்கள் நிர்வாகம் விசாரித்து வருகிறது. டிரைவரையும் தொடர்புகொண்டு பேசினோம். இந்த சம்பவத்துக்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்து உள்ளது.

Next Story