“மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி” - விஜயசாந்தி
மீண்டும் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் விஜயசாந்தி. பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானார். மன்னன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். ராஜாங்கம், சிவப்பு மல்லி, நெற்றிக்கண், நெஞ்சில் துணிவிருந்தால் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தது பேசப்பட்டது. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 2006-ல் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் ‘சரிலேறு நீகேவ்வறு’ படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க விஜயசாந்தி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் நடிப்பது குறித்து விஜயசாந்தி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1980-ல் கிருஷ்ணாவின் ஜோடியாகத்தான் முதலில் அறிமுகமானேன். இப்போது அவரது மகன் மகேஷ் பாபுவுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மகேஷ் பாபுவுடன் நடிப்பதும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.” இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.
Related Tags :
Next Story