டி.வி. நடிகை மீது தாக்குதல்


டி.வி. நடிகை மீது தாக்குதல்
x
தினத்தந்தி 21 Jun 2019 12:07 AM GMT (Updated: 21 Jun 2019 12:07 AM GMT)

பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ராக மாதுரி. கடந்த 16-ந் தேதி டி.வி. படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பினார்.

இவர் நடித்துள்ள ஜோதி என்ற டி.வி. தொடர் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த தொடர் ராக மாதுரிக்கு பெயர் வாங்கி கொடுத்தது. ராக மாதுரி கடந்த 16-ந் தேதி டி.வி. படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க சங்கிலி கழுத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியானார். இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார். தன்னிடம் சிகை அலங்கார நிபுணராக வேலை பார்க்கும் ஜோதிகாவும், அவரது உதவியாளரும் தங்க சங்கிலியை திருடிவிட்டனர் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஜோதிகாவையும், அவரது உதவியாளரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். நாங்கள் திருடவில்லை என்று இருவரும் மறுத்தனர். இந்த நிலையில் மாயமான தங்க சங்கிலி ராக மாதுரியின் காரில் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பொய்யாக திருட்டு பட்டம் கட்டி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக ஜோதிகா ஆத்திரம் அடைந்தார். இதனால் படப்பிடிப்பு அரங்கில் உதவியாளருடன் சென்று ராக மாதுரியின் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக அடித்து தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story