சிபிராஜின் ‘வால்டர்’ தலைப்பு சிக்கல் தீர்ந்தது


சிபிராஜின் ‘வால்டர்’ தலைப்பு சிக்கல் தீர்ந்தது
x
தினத்தந்தி 21 Jun 2019 12:12 AM GMT (Updated: 21 Jun 2019 12:12 AM GMT)

சிபிராஜ் நடிக்கும் புதிய படம் ‘வால்டர்’. ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா வருகிறார். அன்பு டைரக்டு செய்கிறார். பிரபு திலக் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வால்டர் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்த பெயரில் படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும் வால்டர் தலைப்பு தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி தயாரிப்பாளர் சிங்காரவேலன் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. தலைப்பு சிபிராஜ் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறியதாவது:-

“சிபிராஜின் தந்தை சத்யராஜின் வாழ்க்கையில் மறக்கமுடியாத கதாபாத்திரம் வால்டர் வெற்றிவேல். அதன் முக்கியத்துவம் கருதியே சிபிராஜ் படத்துக்கு வால்டர் என்று பெயர் வைக்க விரும்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வால்டர் தலைப்பு தொடர்பாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

தற்போது பிரச்சினை சுமுகமாக முடிந்து வால்டர் தலைப்பு எங்கள் வசமாகி உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது வால்டர் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிரைம் திரில்லர் படமாக தயாராகிறது. சமுத்திரக்கனி போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர்.

இவ்வாறு பிரபு திலக் கூறினார்.

Next Story