நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு?


நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு?
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 5:51 PM GMT)

நடிகர் சங்கத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நேற்று முன்தினம் சென்னையில் தேர்தல் நடந்தது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. தபால் வாக்குகளையும் சேர்த்து நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,173 பேர் ஆவார்கள்.

இதில் மொத்தம் 1,604 பேர் ஓட்டு போட்டனர். தபால் வாக்கு சீட்டுகள் தாமதமாக சென்றதால் வெளியூர்களில் இருந்து ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களிக்க இயலவில்லை. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இதற்காக வங்கிக்கு குறிப்பிட்ட தொகையை நடிகர் சங்கம் வாடகையாக கொடுக்க முடிவாகி உள்ளது. ஓட்டுகள் எப்போது எண்ணப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டு ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

அடுத்த வழக்கு விசாரணை வருகிற 8-ந் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் ஓட்டு எண்ணும் தேதி மற்றும் ஓட்டுக்களை எண்ணும் இடத்தை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அடுத்த மாதமே நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள்.

Next Story