விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்குவதா? தயாரிப்பாளருக்கு அமலாபால் கண்டனம்


விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்குவதா? தயாரிப்பாளருக்கு அமலாபால் கண்டனம்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:00 PM GMT (Updated: 27 Jun 2019 6:41 PM GMT)

விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்க இருந்த அமலாபாலை தற்போது படத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார்.

வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்க அமலாபாலை ஒப்பந்தம் செய்தனர். தற்போது இந்த படத்தில் இருந்து அமலாபால் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து அமலாபால் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“விஜய்சேதுபதி படத்தில் இருந்து நான் விலகவில்லை. ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி பட நிறுவனமே என்னை நீக்கி உள்ளது. நான் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை இதுவரை என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் யாரும் சொன்னது இல்லை. எனது எல்லா பட நிறுவனங்களுக்கும் ஆதரவாகவே இருந்து இருக்கிறேன்.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு எனது சம்பளத்தில் ஒரு பகுதியை வாங்கிக்கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் பண பிரச்சினையில் இருந்ததால் அவருக்கு கடன் கொடுத்து இருக்கிறேன். ‘அதோ அந்த பறவை போல’ படப்பிடிப்பில் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்று கருதி சிறிய அறையில்தான் தங்கி இருந்தேன்.

ஆடை படத்தில் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என்று குறைந்த முன்பணம் மட்டும் வாங்கிக்கொண்டு நடித்தேன். தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க நீங்கள் விதிக்கும் நிபந்தனையை ஏற்க முடியாது. எனவே நீங்கள் தேவை இல்லை என்று தயாரிப்பாளர் ரத்னவேலு எனக்கு தகவல் அனுப்பி உள்ளார். நான் ஊட்டியில் தங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டதை இப்படி சொல்கிறார்.

‘ஆடை’ டிரெய்லரை பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையை காட்டுகிறது. விஜய்சேதுபதியை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் அவரது ரசிகை.”

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.

Next Story